இந்தியா என்பது நூறு கோடி
ஏழை மனங்களில் எழுதிய கனவு
இந்தியா என்பது கங்கை காவிரி
இனைந்து நடக்கிற நடைகளின் அழகு !
பச்சை வயல்களும்
பனிமலை நதிகளும்
மட்டுமல்ல
பசித்த வயிறுகளும் தான்
பாரதமாகும்
இந்தியாவின்
வாழ்க்கை பயணத்தில் இதுவரை
வழிப்போக்கர்களாகவே இருந்தோம்
எதையோ தொலைத்துவிட்ட
ஏக்க உணர்வோடு
இறுதிவரை தேடிச் செல்கிற
தேசாந்திரிகளாய்த் திரிந்தோம்
சொந்த மன்னிலேயே
அன்னியர் போல் உணர்ந்தோம்
முனு முனுப்புகளை விட்டு வந்தோம்
முசாபர்கள் போல
பெருமூச்சிகளைத் தூக்கி வந்தோம்
சுமைகூலி போல..
இது ஏழை நாடல்ல
இது ஏழைகளின் நாடல்ல !
இந்தியா இனியொரு
பெரிய குருசெத்திரத்தில் பரவேசிக்கட்டும்
நாம்
ஆயுதங்களைக் கீழே போடாத
அர்ச்சுனர்களாவோம்.
திக்கற்ற ஏழைகளை நடமாடும் கோவிலெனத்
திருமூலர் கூறுகின்றார்.....
ஆதலால்
குடிசைகளுக்கும் இங்கே
கும்பாபிஷேகம் நட்த்துவோம்.
சோவியத் பூமிக்குக் கடைக்கண் காட்டிய பராசக்தி
இந்தியாவுக்கு
நெற்றிக் கண்ணையே திறக்க
நேரம் பார்த்திருக்கிறாள் !
எழுந்து நின்றால் இமய மலைகள் - நாம்
படுத்திருந்தாலும் பாரத நதிகள்!
முணுமுணுப்புகள்
முழக்கங்களாகட்டும் !
பெருமூச்சிகள்
புயலாக மாறட்டும்.
(மு. மேத்தாவின் ஊர்வலம் புத்தகத்தில் வாசித்தது.......)
0 விமர்சனம்:
Post a Comment